திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். சாத்தூரில் அவர் திமுக கூட்டணி வேட்பாளர் ரகுராமனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது, மதுரையில் பிரதமர் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை இது தான். அதை கையோடு கொண்டு வந்திருக்கிறேன் என ஒரு செங்கலைக் காட்டி நக்கல் செய்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே போகும் இடமெல்லாம் செங்கலை காட்டி பேசிவருகிறார்.இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புகுந்து செங்கலைத் திருடி வந்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான நீதிப்பாண்டியன் ஆன்லைன் மூலம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், ”மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சொத்தின் பாதுகாப்பிற்காகக் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்குள் இருந்து உதயநிதி ஸ்டாலின் செங்கல்லைத் திருடிக்கொண்டு வந்துள்ளார். இந்த உண்மையை அவரே நேற்று விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல் தான் அந்தச் செங்கலை பொதுமக்களிடத்தில் எடுத்துக் காண்பித்துள்ளார். அவரது இந்தச் செயல் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 380இன் படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். ஆகவே, எனது இப்புகார் மனு மீது விசாரணை செய்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகக் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் வளாகத்திற்குள்ளே இருந்து செங்கலைத் திருடிச் சென்ற உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் திருடி வந்த செங்கல்லைக் கைப்பற்றி சட்டப்படி தண்டனை பெற்றுத் தந்திட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.