தமிழகத்தின் உரிமையை டெல்லியில் அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று மு.க.ஸ்டாலின் தாக்கி பேசினார்.
தி.மு.க. வேட்பாளர்களை
ஆதரித்து சென்னை ராயபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார்.
அந்தப் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின்,
ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை ஓட, ஓட விரட்ட வேண்டும் என்பதற்காக உங்களிடத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு வந்திருக்கிறேன்.
அவர் படுதோல்வி அடையவேண்டும். அவருக்கு ‘டெபாசிட்' பறிபோகவேண்டும்.
ஜெயக்குமார் ‘மைக்'கை பார்த்தால் மட்டுமே பேசுவார். மக்களை பார்த்தால் பேசமாட்டார்.
அவர் ராயபுரம் தொகுதியில் 5 முறை வென்றும், தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவருக்கு சரியான பாடம் வழங்க மக்கள் தயாராக இருக்கவேண்டும்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியபோது தி.மு.க. சார்பில் ஆதரவு கொடுத்தோம்.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டும் அல்ல, கேரளா, மேற்கு வங்காளத்தில் உள்ளே நுழைய விடாத மாதிரி, தி.மு.க. ஆட்சியில் இந்த சட்டத்தை உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.
பிரதமர் நரேந்திர மோடி என்ன சொல்கிறாரோ, அதை செய்யும் அடிமை ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பற்றிய ஊழல்களை பட்டியலிட்டு கவர்னரிடம் கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று தெரியும். ஆனால் மரபுக்காக கொடுத்தோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே நடவடிக்கை எடுக்கப்படும்.
மு.க.ஸ்டாலின் உழைக்காமலேயே முன்னுக்கு வந்தவர் என்று சொல்கிறார். என்னுடைய உழைப்பை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதா?
ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து உழைத்த கருணாநிதி, மு.க.ஸ்டாலினிடம் எனக்கு பிடித்தது, ‘உழைப்பு..., உழைப்பு.., உழைப்பு...’ என்று கூறியிருக்கிறார்.
அவர் கொடுத்த இந்த உழைப்பு பதவி ஜனாதிபதி பதவியை விட பெரிய பதவி. எடப்பாடி பழனிசாமி என்று சொன்னாலே, கரெப்ஷன், கலெக்ஷன், கமிஷன், கொடநாடு கொலை, கொள்ளை, சாத்தான்குளம் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், நீட் தேர்வால் அனிதா உள்பட மாணவர்கள் மரணம், பொள்ளாச்சி சம்பவம், ஜெயலலிதா, சசிகலாவுக்கு செய்த துரோகம் தான்.
இது திராவிட மண். பெரியார், அண்ணா, கருணாநிதி வாழ்ந்த மண். இங்கே மோடி மஸ்தான் வேலை எல்லாம் பலிக்காது.
இங்கே நிற்பவர்கள் மட்டும் வேட்பாளர்கள் இல்லை. நானும்தான் வேட்பாளர். முதல்-அமைச்சர் வேட்பாளர். மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்
என்று பேசினார்.